செய்திகள்
கூலியை உயர்த்தாவிட்டால் ஸ்டிரைக் - விசைத்தறியாளர்கள் அதிரடி அறிவிப்பு
ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தையை நடத்தி கூலி உயர்வினை, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்:
பல்லடத்தில் திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழிலாளர் நலத்துறை ஆணையாளர்கள் முன்னிலையில் 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனை கூட்டு கமிட்டி கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. அடுத்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு கூலி உயர்வு வழங்க வேண்டும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து, விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தையை, திருப்பூர், கோவை 2 மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து, பேச்சுவார்த்தையை நடத்தி கூலி உயர்வினை, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையரை சந்தித்து முறையிடப்படும்.
காலம் தாழ்த்தினால் திருப்பூர், கோவை 2 மாவட்டங்களிலுள்ள சுமார் 2 1/2 லட்சம் விசைத்தறிகளை நிறுத்தி, வேலைநிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே தேவைப்பட்டால் விசைத்தறிகளை நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.