செய்திகள்
கொலை

மதுரையில் தொழிலாளி அடித்துக் கொலை

Published On 2021-09-04 10:36 GMT   |   Update On 2021-09-04 10:36 GMT
மதுரையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாலிபர் படுகாயங்களுடன் இறந்து கிடப்பதாக கீரைத்துறை போலீசுக்கு தகவல் வந்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு முதல் மாடியில் வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 2 பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

போலீசார் இருவரையும் பரிசோதித்தனர். 2 வாலிபர்களில் ஒருவர் இறந்தது தெரியவந்தது.

உயிருக்கு போராடிய மற்றொரு வாலிபரை போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் 2 பேரும் அதே பகுதியில் உள்ள பாத்திரக் கடையில் லோடுமேனாக வேலை பார்த்தது தெரிய வந்தது.

இறந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 23) என்றும், படுகாயம் அடைந்தவர் அதே பகுதியை மாரீஸ்வரன் (27) என்பதும் தெரிந்தது.

அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

மகேஸ்வரனும், மாரிஸ்வரனும் நேற்று இரவு மது அருந்தினர். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 2 பேரும் உருட்டுக்கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

படுகாயம் அடைந்த மகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

உயிருக்குப் போராடிய மாரீஸ்வரன் “என்னை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று கூக் குரல் எழுப்பினார்.

இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர்.

அப்போது மகேஸ்வரன் பிணமாக கிடப்பதும், மாரீஸ்வரன் உயிருக்கு போராடுவதும் தெரிந்தது. இதுகுறித்து கீரைத்துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரிந்தது.

Tags:    

Similar News