செய்திகள்
விபத்துக்குள்ளான கார்.

பல்லடம் அருகே மரத்தில் கார் மோதி பால்பண்ணை மேலாளர் பலி

Published On 2021-08-22 12:40 GMT   |   Update On 2021-08-22 12:40 GMT
பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் வரும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
பல்லடம்:

பொள்ளாச்சியை சேர்ந்த தேவராஜ் மகன் முகிலன் (வயது 39). இவர் தனியார் பால்பண்ணையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியில் பால் சேகரிப்பு மையங்களில் ஆய்வு செய்வதற்காக  அவரும் மற்றொரு உதவி மேலாளர் அகிலேஸ்வரன்(35) என்பவரும் பால் பண்ணைக்கு சொந்தமான  காரில் புறப்பட்டனர்.

காரை பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ்(39) என்பவர் ஓட்டி வந்தார். பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் வரும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

இதில் காரின் இடதுபுறம் அமர்ந்திருந்த முகிலனுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த பல்லடம் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவர்களை பரிசோதித்தபோது முகிலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து அகிலேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன முகிலனுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News