செய்திகள்
கொள்ளை

தக்கலையில் மினி பஸ் அதிபர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

Published On 2021-08-11 09:55 GMT   |   Update On 2021-08-11 09:55 GMT
தக்கலையில் மினி பஸ் அதிபர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:

தக்கலையை அடுத்த முருங்கவிளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 54).

சுந்தர்ராஜூக்கு சொந்தமாக மினி பஸ்கள் உள்ளன. இவரது மனைவி விக்டரி பாய். இவர்களின் உறவினர்கள் சிலர் சென்னையில் உள்ளனர்.

உறவினர்களை பார்க்க சுந்தர்ராஜ், விக்டரிபாய் மற்றும் அவர்களின் குழந்தைகள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றனர்.

இன்று அதிகாலை அவர்கள் சென்னையில் இருந்து ஊர் திரும்பினர். வீட்டுக்கு சென்றதும், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் தரையில் சிதறிகிடந்தது.

மேலும் பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த நகை மற்றும் பொருட்கள் மாயமாகி இருந்தது. இது பற்றி சுந்தர்ராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார்.

புகாரில் வீட்டில் இருந்த 35 பவுன் நகைகளை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறியிருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் தக்கலை டி.எஸ்.பி.கணேசன், இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு கண்காணிப்பு கேமிரா எதுவும் இல்லை, இதனால் அக்கம் பக்கத்து வீடுகளில் கேமிரா உள்ளதா என விசாரித்தனர்.

இதில் கொள்ளை நடந்த சுந்தர்ராஜ் வீடு அருகே உள்ள இன்னொருவர் வீட்டில் கண்காணிப்பு கேமிரா இருப்பது தெரியவந்தது. அந்த கேமிராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதிக்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

சுந்தர்ராஜ் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், சுந்தர்ராஜ் சென்னை சென்றதை அறிந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். எனவே இச்சம்பவத்தில் ஈடுபட்டது உள்ளூர் கொள்ளையரா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.

தக்கலையை அடுத்த கல்குறிச்சி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இதுபோல நகை கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த நிலையில் மினி பஸ் அதிபர் சுந்தர்ராஜ் வீட்டிலும் நகை கொள்ளை நடந்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News