செய்திகள்
கொலை

பழனியில் அட்டை கம்பெனி தொழிலாளி குத்திக்கொலை- கள்ளக்காதலி தற்கொலை

Published On 2021-08-10 04:56 GMT   |   Update On 2021-08-10 04:56 GMT
பழனியில் அட்டை கம்பெனி தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது கள்ளக்காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 35). இவர் மடத்துக்குளத்தில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இதே அட்டை கம்பெனியில் சின்னக்கலையம்புத்தூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த விக்டோரியா (வயது 45) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. விக்டோரியாவுக்கு அய்யனார் என்பவருடன் திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.

வால்பாறையில் வசித்து வந்த விக்டோரியா கணவருடன் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடால் அவரை விட்டு பிரிந்து மகன்களுடன் இங்கு வசித்து வந்துள்ளார். நேற்று அட்டை கம்பெனி விடுமுறை என்ற நிலையிலும் பத்மநாபன் தனது காதலியை பார்க்க சின்ன கலையம்புத்தூருக்கு வந்தார். அதன் பிறகு இரவில் இதே பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பத்மநாபன் உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலையில் விக்டோரியா தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விக்டோரியாவுக்கு வேறு சிலருடனும் பழக்கம் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவரை பார்க்க வந்த பத்மநாபனை மர்மநபர்கள் கொலை செய்து விட்டு விக்டோரியாவை மிரட்டி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

இதன் காரணமாகவே விக்டோரியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பத்மநாபன் கொலையில் ஈடுபட்டுள்ளாரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News