செய்திகள்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு-பல்லடத்தில் விரைவில் சாலை விரிவாக்கம்
முக்கிய சந்திப்புகள், இட வசதி உள்ளிட்டவற்றை பொறுத்து இரண்டு பக்கமும் விரிவாக்கம் செய்யப்படும்.
பல்லடம்:
பல்லடத்தில் தேசியநெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்பின் அதிகரித்து வரும் வாகன பெருக்கம் காரணமாக எப்போதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து வருகிறது.
ஏராளமான விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு காரணமான சாலையைவிரிவுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் விரிவாக்க பணி மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பல்லடம் என். எச்., சாலையில் தாராபுரம் ரோடு பிரிவு பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை தோராயமாக ரூ.7 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகள், இட வசதி உள்ளிட்டவற்றை பொறுத்து இரண்டு பக்கமும் விரிவாக்கம் செய்யப்படும்.
அதற்கேற்றவாறு இடையூறாக உள்ள மின்கம்பம் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அரசின் ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.