செய்திகள்
இளைய சமுதாயத்தை கெடுக்காமல் வியாபாரிகள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்-போலீசார் அறிவுரை
வீடுகளை வாடகைக்கு விடுவது தவறு இல்லை. அவர்களிடம் மொபைல்போன், ஆதார் கார்டு போன்றவற்றை வாங்கி வைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் அருகே கொடுவாய் பகுதியில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு ஆலோசனை கூட்டம் பல்லடம் டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன் தலைமையில் நடந்தது. அதில் அவர் பேசியதாவது:-
பான்பராக், குட்கா போன்ற புகையிலைப்பொருட்களை விற்றால் சொற்ப பணமே கிடைக்கும். அதிலும் அதிக அளவில் கெட்டுப்போவது இளைய சமுதாயம் தான்.சில ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு வாழ்வை இழக்காதீர்கள்.
மனசாட்சி பொய் பேசாது. மனசாட்சி சொல்வதை கேட்காததே பிரச்சினைக்கு அடிப்படை காரணம். போலீஸ் நிலையங்களில் எல்லோரையும் மதிக்க சொல்லியுள்ளோம். உங்களுக்கு சேவை செய்யவே கார், வீடு போன்றவை எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் என்னிடம் பேசுங்கள். உங்களுக்கு நான் சொந்தக்காரன். கிராமங்களுக்கு சென்று முகாம் நடத்தி அங்கேயே பிரச்சினையை தீர்க்கிறோம். அனைவரும் ‘சிசிடிவி’ கேமரா பொருத்துங்கள். வீடுகளை வாடகைக்கு விடுவது தவறு இல்லை. அவர்களிடம் மொபைல்போன், ஆதார் கார்டு போன்றவற்றை வாங்கி வைக்க வேண்டும்.
பணத்துக்காக உயிரை எடுப்பது நிறைய நடக்கிறது. ‘சிசிடிவி’ பொருத்துவதால் நமக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. போலீசுக்கும் திருட்டு, கொள்ளை போன்றவற்றை கண்டறிய உதவும். இவ்வாறு டி.எஸ்.பி., பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் புகையிலை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.