செய்திகள்
திருப்பூர் அருகே வடமாநில தொழிலாளர்கள்-வாலிபர்கள் பயங்கர மோதல்
மோதல் சம்பவ வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் சேகராம்பாளையத்தில் குமரவேல் என்பவருக்கு சொந்தமான பழைய பொருட்கள் பிரிக்கும் குடோன் உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று குமரவேல் குடோன் அருகில் உள்ள குட்டையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கும் குடோனில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் குடிபோதையில் இருந்ததால் வாக்குவாதம் மோதலாக மாறி சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதல் சம்பவ வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் 60-க்கும் மேற்பட்ட அருள்புரத்தை சேர்ந்த வாலிபர்கள், வடமாநில தொழிலாளர்களை சரமாரியாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோதலில் காயமடைந்த கமலசங்கர் என்ற வடமாநில வாலிபர் திருப்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விடுமுறை நாட்களில் வடமாநில தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.எனவே விடுமுறை நாட்களில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.