செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர்கள் கைது
பல்லடம் அருள்புரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 4 வாலிபர்களை கைது செய்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 30). சம்பவத்தன்று இவர் காந்தி நகரில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி ரோட்டில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் கார்த்திக் ராஜாவை வழிமறித்தனர்.
பின்னர் கத்தியை காட்டி “உன்னிடம் இருக்கும் பணத்தை எடு” என மிரட்டியுள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் சிலர் வந்தனர். இதனை பார்த்த வழிப்பறி கும்பல் மாட்டி கொள்வோம் என்பதால் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து கார்த்திக் ராஜா பல்லடம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பல்லடம் அருள்புரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 4 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் பதில் அளித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவாடானையை சேர்ந்த முகமது வாசிம்கான் (20), ஹபீப் ரகுமான் (18), இளையான்குடியை சேர்ந்த சரவணன் (25), புதுக்கோட்டையைச் சேர்ந்த சூர்யா (20) என்பதும், அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.