செய்திகள்
கரைபுரண்டு ஓடும் வெள்ளம்-கூட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டப்படுமா?
தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழான்வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கூட்டாறை தாண்டி வர முடியாத நிலை ஏற் பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கூட்டாறு உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் கூட்டாறு வழியாக அமராவதி அணைக்கு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் கூட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழான்வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கூட்டாறை தாண்டிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துவரும் மலைவாழ் மக்கள் விளைபொருட்களை நகரப்பகுதிகளுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கின்றனர்.
சிலர் அத்தியாவசிய தேவைக்காக ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில்,
தண்ணீர் குறைவாக வரும்போது ஆற்றை கடந்து விடலாம். ஆனால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நேரத்தில் எவ்வாறு கரையை கடக்க முடியும். இதனால் கூட்டாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தொடர்ந்து நடவடிக்கை எடுக்கா விடில் வாழ்வாதாரம் பாதித்து மலைவாழ் மக்கள் மிகவும் சிரமத்திற்குள் தள்ளப்படுவார்கள் என்றனர். கூட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.