செய்திகள்
தமிழகத்தில் மேலும் 1,808 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 33,911 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் புதிதாக 1,44,219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 25,48,497 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனாவால் மேலும் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 33,911 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணைநோய்கள் இல்லாத ஒருவர் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 23,364 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 2,447 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,91,222 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.