செய்திகள்
மானாவாரி நிலங்களில் பழவகை மரங்களை நடவு செய்யலாம்- தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
பருவமழைக்கு கோடை உழவு செய்து கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை விதைக்கலாம்.
மடத்துக்குளம் :
உடுமலை சுற்றுப்பகுதிகளில் பருவமழையை ஆதாரமாக கொண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும் மானாவாரி நிலங்கள் அதிகளவு உள்ளது. மழைப்பொழிவு குறைவாக உள்ள போது இந்நிலங்கள் தரிசாக விடப்படுகிறது. இதைத்தவிர்த்து குறைந்த தண்ணீர் தேவையுள்ள பழ மரங்களை நட்டு பராமரித்தால் வருவாய் கிடைக்கும் என அறிவுறுத்தப்படுகிறது.
இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:- கரிசல், செம்மண், மணல் கலந்த மண், இரு மண் வகை என பல வகைகள் மானாவாரி நிலங்களில் உள்ளன. சந்தையில் விலை கிடைக்கும் கொய்யா, சீத்தா, மாதுளை, நாவல், முந்திரி, மா, சப்போட்டா பழ மரங்களை விவசாயிகள் நடவிற்கு தேர்வு செய்யலாம்.
ஜம்பு நாவல் எனப்படும் மரம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழங்களை சீசனில் அளிக்கும். மானாவாரி நிலங்களிலும் மா மரங்கள் ஒரு ஏக்கருக்கு ஆண்டிற்கு ரூ.5லட்சம் வரை லாபம் அளிக்கிறது.கொய்யா மரங்கள் ஏக்கருக்கு 10 டன் பழம் அளிக்கும். தண்ணீர் வசதி இல்லையென கருதி மானாவாரி நிலங்களில் எவ்வித சிறிய முதலீடு கூட செய்யாமல் தரிசாக விட்டுவிடுகின்றனர்.
இம்முறையை கைவிட்டு பருவமழைக்கு கோடை உழவு செய்து கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை விதைக்கலாம்.பழ மரங்களை நடவு செய்ய தற்போது உகந்த தட்பவெப்ப நிலை நிலவுகிறது. மானாவாரி நிலத்தில் பண்ணைக்குட்டை கட்டி மழை நீரைதேக்கி ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். இதனால் விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.