செய்திகள்
புதை மின் வடம் அமைக்கும் பணியால் விபத்து அபாயம்
கட்டுமான பணியும் நடப்பதால் சாலை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அவிநாசி ரோடு குமார் நகரிலிருந்து அங்கேரிபாளையம் செல்லும் சாலையில் புதை மின் வடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சாலையோரம் குழி தோண்டி, கான்கிரீட் கட்டுமானம் ஏற்படுத்தி அதில் மின் கேபிள்கள் அமைக்கப்படுகிறது. இப்பணிக்காக குழி தோண்டப்பட்டு சாலையின் பாதி வரை மண் குவியல் போடப்பட்டுள்ளது. கட்டுமான பணியும் நடப்பதால் சாலை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குழி தோண்டிய பகுதியில் உரிய பாதுகாப்பு நடைமுறையும் இல்லை.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர பெரிய கேபிள் உருளைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. ஏற்கனவே, வாகன நெருக்கடி நிலவும் இந்த சாலையில் இதுபோன்ற இடையூறுகளால் மேலும் சிரமம் அதிகரித்துள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.