செய்திகள்
தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு
மக்களுக்காக அருகிலுள்ள தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் காந்தி நகர் துணை தபால் நிலையம் மற்றும் தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் ரெயில்வே டிக்கெட் முன்பதிவை எளிதாக மேற்கொள்ளலாம் என, தபால்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்காக அருகிலுள்ள தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஓபன் டிக்கெட் தவிர்த்து சீனியர் சிட்டிசன், ஏ.சி., 2-ம்வகுப்பு, பொதுவகுப்பு, தக்கல் உள்ளிட்ட டிக்கெட்கள் இங்கு முன்பதிவு செய்யப்படுகின்றன. கொரோனாவால் 3 மாதங்களாக புக்கிங் செய்யப்படாமல் இருந்தது.
தற்போது ரெயில் போக்குவரத்து தொடங்கிய நிலையில், திருப்பூர் மாவட்ட வாடிக்கையாளர்கள் தாராபுரம் மற்றும் காந்திநகர் தபால் நிலையங்களில் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 04258 220278 (தாராபுரம்) மற்றும் 0421 2486288 (திருப்பூர்) எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.