செய்திகள்
50 மயில்கள் பலியான சம்பவம்-உண்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எலிக்காக வைக்கப்படும் குருணை மருந்தை உண்டு மயில்கள் இறப்பதாக ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்குள் ஏராளமான மயில்கள் இறந்திருப்பது பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. தேசியப்பறவையான மயில் காக்கப்பட வேண்டும். அதேதருணம் விவசாய விளைநிலங்கள் துவம்சம் ஆகாமலும் இருக்க வேண்டும் என்பது இங்குள்ள விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது. மாவட்டம் முழுவதும் எண்ணற்ற மான்கள், மயில்கள் இருக்கின்றன.
நூற்றுக்கணக்கான மயில்கள், காட்டு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களை ஒட்டி கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. மயில்கள் உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் வரும்போது விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:
விலைவாசி உயர்வு, ஆள் கூலி உள்ளிட்ட பல காரணங்களால் விவசாய தொழில் பெரும் சவாலாக உள்ளது. எலி, பெருக்கான், நாய், பூச்சி, நோய் தாக்கம் போன்றவற்றால் விவசாய உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. மயில்களால் ஏற்படும் பாதிப்பும் அதிகம். விளைநிலங்களில் முகாமிடும் மயில்கள் தக்காளி, வெங்காயம், தானியங்கள் போன்றவற்றை கடுமையாக சேதப்படுத்துகின்றன’’ என்கின்றனர்.
கடந்த சில தினங்களில் இறந்த மயில்களின் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியுள்ளது. எலிக்காக வைக்கப்படும் குருணை மருந்தை உண்டு மயில்கள் இறப்பதாக ஒருதரப்பினர் கூறுகின்றனர். மயில்களின் தொல்லை தாங்காமல் விஷம் வைத்து கொல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாய்கள் கடித்தும் வாகனங்களில் அடிபட்டும் இறக்கும் மயில்கள் இறக்கின்றன. மேலும் இறைச்சி மற்றும் இறகுக்காக மயில்கள் வேட்டையாடப்படுவதும் நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மயில்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மயில்கள் கொல்லப்பட்டால் அபராதம் மட்டுமின்றி சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. மயில்கள் இறப்பு விவகாரத்தில் உண்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.