செய்திகள்
கீழ்ப்பாக்கத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த 38 வயதான பெண் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் உணவகம் நடத்தி வருகிறார். இவர்களது வீட்டில் வேலை செய்யும் நபரை ஆஸ்பிரின் கார்டன் சாலையில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு மோட்டார்சைக்கிளில் நேற்று இரவு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். இதையடுத்து வாலிபர் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்று விட்டார். இதுபற்றி கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நடுரோட்டில் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை தேடி வருகிறார்கள்.