செய்திகள்
தற்கொலை

மதுரையில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-07-09 06:44 GMT   |   Update On 2021-07-09 06:44 GMT
மதுரையில் கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை கரும்பாலை பி.டி காலனியைச் சேர்ந்தவர் சிவசக்தி (வயது 43). இவர் அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (32), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே சுப்புலட்சுமி கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.

இந்த சூழ்நிலையில் சுப்புலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி திருப்பூருக்கு சென்றார். அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் அவர் வேலை பார்த்தார். அப்போது அங்கு மதுரை பாலமேட்டை சேர்ந்த செல்வகுமார் (27) என்பவரும் வேலை பார்த்தார். சில நாட்களில் சுப்புலட்சுமிக்கும், செல்வகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்தது.

அவர்கள் 2 பேரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

கொரோனா காலம் என்பதால் திருப்பூரில் கம்பெனி மூடப்பட்டது. இதனால் சுப்புலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை பி.டி. காலனியில் உள்ள தாய் வீட்டுக்கு திரும்பினார். அதேபோல் செல்வகுமாரும் சொந்த ஊர் திரும்பினார்.

இவர்களின் கள்ளக்காதல் இங்கும் தொடர்ந்து அரங்கேறி வந்தது.

மனைவி சுப்புலட்சுமி மீண்டும் மதுரை திரும்பிய செய்தி அவரது கணவர் சிவசக்திக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் மாமியார் வீட்டுக்கு சென்று சுப்புலட்சுமியிடம், "நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம்" என்று அழைத்தார். ஆனாலும் சுப்புலட்சுமி கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.

எனவே வாழ்க்கையில் விரக்தியடைந்த சிவசக்தி கடந்த 4 நாட்களுக்கு முன்பு வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிவசக்தி இன்று காலை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். பின்னர் அவர் மனைவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு கதவு மூடப்பட்டு இருந்தது. சிவசக்தி “வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே என்ன நடக்கிறது?” என்று பார்த்தார். அப்போது சுப்புலட்சுமியும் செல்வகுமாரும் படுக்கையில் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து சிவசக்தி 2 பேரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார். எனவே அவர் வீட்டு கதவை தட்டினார்.

சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு கதவைத் திறந்த சுப்புலட்சுமி, “நான் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை, எனவே நீ வீட்டுக்குள் வரக்கூடாது” என்று தடுத்தார். இருந்தபோதிலும் சிவசக்தி ‘நான் குளித்து விட்டு சென்று விடுகிறேன்’ என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது பாத்ரூமில் செல்வகுமார் ஒளிந்து இருந்தார். ஆத்திரமடைந்த சிவசக்தி வீட்டுக்கு வெளியே சென்று கதவை பூட்டினார். அதன்பிறகு அக்கம்பக்கத்தினரை அழைத்தார். அப்போது அவர்கள் “அண்ணா நகர் போலீசுக்கு முதலில் தகவல் தெரிவியுங்கள்” என்று கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் “போலீசார் வந்தால் கைது செய்வார்கள். இதனால் உள்ளூரில் பெயர் கெட்டு விடுமே?” என்று பயந்தார். உடனே அவர் வீட்டின் அறைக்கு சென்று கதவை தாழிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் காதலி வீட்டுக்குள் கள்ளக்காதலன் தூக்குப்போட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News