செய்திகள்
திருப்பூர் அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு
நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீண்டும் அதனை கோவிலுக்கே ஒப்படைக்கிறோம் என்று எழுதிக்கொடுத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அடுத்த கண்டியன்கோவில் கிராமம் முதியாநெரிசலில் கண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக 6.80 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த 5 பேர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். அதனை மீட்க வேண்டுமென கோவில் பக்தர்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டுவந்தது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
தற்போது தமிழகம் முழுவதும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கண்டீஸ்வரர் கோவில் நிலத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் வெங்கடேசன், கோவில் செயல் அலுவலர் மாலதி ஆகியோர் நிலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அதனை ஆக்கிரமித்து செய்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீண்டும் அதனை கோவிலுக்கே ஒப்படைக்கிறோம் என்று எழுதிக்கொடுத்தனர். இதையடுத்து அந்த நிலம் கண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.