செய்திகள்
கோவில்கள் திறப்பால் பூக்கள் விலை உயர்வு
திருப்பூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பலரும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
திருப்பூர்:
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக கடும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது.
இதில் மிக முக்கியமாக பொது போக்குவரத்து முடக்கம், கோவில்கள் திறக்க அனுமதி ரத்து, சந்தைகள் இயங்க அனுமதி மறுப்பு போன்றவை இருந்தன. இதன் பின்னர் கொரோனா தொற்று குறைய, குறைய ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளையும் வழங்கியது.
இந்த ஒரு பகுதியாக நேற்று முன்தினம் முதல் கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திருப்பூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் பலரும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதுபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் தற்போது இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளது. திருப்பூரில் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் முல்லைப்பூ ரூ.160-க்கும், அரளிப்பூ ரூ.30-க்கும், பிச்சிப்பூ ரூ.240-க்கும், ரோஜா ரூ.80-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது.