செய்திகள்
நூதன முறையில் மதுபாட்டில்களை கடத்தும் கும்பல்
விவசாயம் சார்ந்த உரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்வதைப்போல மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து எடுத்து வருகின்றனர்.
அவிநாசி:
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் இருந்து மதுபானங்களை அதிகளவில் வாங்கி வந்து மும்மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தொழிலில் சிலர் ஈடுபடுகின்றனர்.
போலீசார் சோதனையில் அவர்கள் சிக்கி வருகின்றனர்.
இந்தநிலையில் மதுபாட்டில் கடத்தலில் ஈடுபடுவோர் நூதன வழியை பின்பற்றுகின்றனர்.
அதன்படி வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மதுபானங்களை எடுத்து வருவோரில் பலர் தங்கள் வாகனங்களில் விவசாயம் சார்ந்த உரம் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்வதைப்போல, மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து எடுத்து வருகின்றனர். இதனால் எளிதாக தப்பித்துக் கொள்கின்றனர்.
மேலும் சோதனைச்சாவடி அல்லாத புறவழிச்சாலைகளை அடையாளம் கண்டு அந்த வழியாகவும், அவர்கள் மதுபானங்களை எடுத்து வருவது தெரியவந்துள்ளது .இதையடுத்து, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.