செய்திகள்
நொய்யல் ஆறு சீரமைக்கும் பணி தீவிரம்
நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாத காலத்தில் கட்டிட கழிவுகள் மற்றும் பனியன் நிறுவன கழிவுகளையும் பலர் கொட்டி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூரின் ஜீவநதி என நொய்யல் ஆறு அழைக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்கும் நொய்யல் ஆறு திருப்பூர் வழியாக பல மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் திருப்பூரில் பின்னலாடை தொழில் பிரதானம் என்பதால் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே திருப்பூரில் முறைகேடாக இயங்கும் பல நிறுவனங்கள் நொய்யல் ஆற்றில் அடிக்கடி சாய மற்றும் சலவை கழிவுகளை திறந்து விடுகின்றன.
இதுபோல் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாத காலத்தில் கட்டிட கழிவுகள் மற்றும் பனியன் நிறுவன கழிவுகளையும் பலர் கொட்டி வருகிறார்கள். இதனால் நீர்வளம் மற்றும் நிலவளமும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுபோல் பல இடங்களில் நொய்யல் ஆற்றில் முட்புதர்கள் மற்றும் செடிகளும் படர்ந்து கிடக்கின்றன.இவ்வாறு புதர்மண்டி நொய்யல் ஆறு இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் வரத்து இருந்தாலும் அதனை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை.
எனவே இதனை முறையாக தூர்வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி திருப்பூரில் நொய்யல் ஆறு பல பகுதிகளில் தூர்வாரப்பட்டு வருகிறது. கரையை பலப்படுத்தும் பணி ராட்சத எந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.