செய்திகள்
பொதுமக்கள் குவிந்ததால் திருப்பூரில் மீன் மார்க்கெட் மூடல்
கடந்த வாரம் கட்டுக்கடங்காத அளவுக்கு பொதுமக்கள் குவிந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. அதன்படி நேற்று 337 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 125-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 448 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 366-ஆக உள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2பேர் பலியானதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை தற்போது 738-ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பனியன் நிறுவனங்கள்,மளிகை, காய்கறி கடைகளில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், நாளை முதல் மேலும் பல்வேறு நிறுவனங்கள், கடைகள் திறக்கப்பட உள்ளதால் கூடுதலாக அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி மற்றும் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமைதோறும் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்து வந்தனர். கடந்த வாரம் கட்டுக்கடங்காத அளவுக்கு பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து இன்று தென்னம்பாளையம் மீன்மார்க்கெட் மூடப்பட்டது.மீன் வாங்க பொதுமக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.