கோவையில் இன்று காலை சூடான் மாணவர் விபத்தில் பலி
கோவை:
சூடான் நாட்டைச் சேர்ந்தவர் பிப்சலவு (வயது 20). இவர் கோவையில் அறை எடுத்து தங்கி ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார்.
இந்த நிலையில் பிப்சலவு இன்று காலை மோட்டார் சைக்கிளில் ஈச்சனாரி அருகே சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந் தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆலாந்துறை செட்டியார் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பாலாமணி (55). இவர் நேற்று தனது மகன் முத்துக்குமாருடன் மோட்டர்சைக்கிளில் சென்றார். அப்போது பேரூர் மாதம்பட்டி ரோட்டில் வந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்தது. இதில் திடீரென பிரெக் போட்டதால் மோட்டர்சைக்கிளில் இருந்து 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது அந்த வழியாக ரேசன் அரிசி ஏற்றி வந்த லாரி பாலாமணி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துக்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து வந்த பேரூர் போலீசார் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் கண் முன்னே தாய் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.