செய்திகள்
சின்ன வெங்காயத்தில் புழுக்கள் தாக்குதல்-விவசாயிகள் அதிர்ச்சி
மக்காச்சோளம் பயிரிட்ட வயலில் வெங்காயம் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்.
பல்லடம்
பல்லடம் கவுண்டம்பாளையத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காய பயிர்கள் திடீரென புழுக்கள் தாக்கி கருகின. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கு வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் அதிகாரி கவிதா கூறியதாவது:-
படைப்புழு தாக்குதலால் சின்ன வெங்காயத்தில் பயிர்கள் கருகி உள்ளன. மக்காச்சோள பயிரை தாக்கும் படைப்புழுக்கள், வெங்காய பயிர்களை மாற்று உணவாக பயன்படுத்தியிருக்கலாம் என்று யூகிக்கிறோம் இதை உறுதி செய்ய பயிர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். புழுக்களை கட்டுப்படுத்த ஆழமான உழவு மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ இட வேண்டும்.வயல் வரப்புகளில் ஆமணக்கு பயிரிடலாம்.
இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல், நீல நிறத்துணி அல்லது பாலிதீன் ஷீட்டை வயல்களில் விரித்து வைத்தல் உள்ளிட்ட வழிமுறைகளை கையாளலாம். மக்காச்சோளம் பயிரிட்ட வயலில் வெங்காயம் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.