பாளையில் ஆட்டோ உடைப்பு: 3 பேர் கைது
நெல்லை:
பாளை தெற்கு பஜார் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.
வழக்கமாக இவர் தனது வீட்டருகே உள்ள சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி இருப்பார். அதுபோல நேற்று முன்தினம் இரவும் ஆட்டோவை நிறுத்தி இருந்தார்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது ஆட்டோ கண்ணாடி உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் பாளை போலீசில் புகார் செய்தார்.
பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த இடத்தில் பல கடைகள் உள்ளது.
அந்த கடைகளில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் போலீசார் அந்த கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சம்பவத்தன்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் குடிபோதையில் ரகளை செய்தபடி வந்தது தெரிந்தது. அவர்கள் கீழே கிடந்த கற்களை எடுத்து ஆட்டோவை உடைத்ததும் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயது20), பிரேம் (20), இசக்கிதாஸ் (19) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.