செய்திகள்
கைது

கோவை காந்திபுரத்தில் பிரபல நகைக்கடையில் 16 பவுன் நகைகளை திருடிய ஊழியர் கைது

Published On 2021-06-22 10:25 GMT   |   Update On 2021-06-22 10:25 GMT
கோவை காந்திபுரத்தில் பிரபல நகைக்கடையில் 16 பவுன் நகைகளை திருடியது தொடர்பாக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக நகைக்கடை கடந்த ஏப்ரல் 3-ந்தேதி அடைக்கப்பட்டது.

இந்த கடையில் விற்பனை பிரதிநிதியாக பொள்ளாச்சி அருகே உள்ள குப்பன்புதூரை சேர்ந்த கவுதம்(வயது26) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த மாதம் 23-ந் தேதி கடையில் உள்ள நகைகளை பார்ப்பதற்காக கடைக்கு வந்தார். பின்னர் அவர் கடையை பூட்டி விட்டு சென்றார். 

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கடையில் உள்ள நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது 17 கிராம் நெக்லஸ், 59 கிராம் செயின், 24 கிராம் கைச்செயின் உள்பட 16 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது கடையில் வேலை பார்க்கும் கவுதம் நகைகளை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. உடனடியாக அவர்கள் இதுகுறித்து நகை கடை மேலாளர் தேவராஜூக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் சம்பவம் குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கவுதமை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News