செய்திகள்
திருப்பூருக்கு வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு
பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பூர் ரெயில் நிலையம் வந்தது.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி புறப்பட்டனர்.
தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி இடுபொருள் உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்க தொடங்கியுள்ளன. இதையடுத்து திருப்பூரை நோக்கி வடமாநில தொழிலாளர்கள் வரத்தொடங்கி இருக்கிறார்கள். வடமாநிலத்தில் இருந்து வரும் ரெயில்களில் திருப்பூர் நோக்கி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பூர் ரெயில் நிலையம் வந்தது. இந்த ரெயிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் வந்தனர்.
அதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்தனர். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்துள்ளனர். தொழில் நிறுவனங்கள் படிப்படியாக செயல்பட உள்ள நிலையில் வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா குறைந்துள்ள நிலையில் மீண்டும் பரவாமல் இருக்க வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.