செய்திகள்
அ.தி.மு.க. கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. கூட்டம் மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் சசிகலாவையும் அவரை சார்ந்தவர்களையும் அ.தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது. அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா தொலைபேசியில் சாதிய உணர்வுகளை தூண்டும் விதமாக பேசி ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக வாழ்ந்து வரும் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதற்கு கண்டனம் தெரிவிப்பது, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீது காவல்துறை மூலம் பொய் வழக்கு போடும் தி.மு.க அரசை கண்டிப்பது,
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் அதிக எண்ணிக்கையில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அறிவுரைப்படி கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டும்.
எதிர்க்கட்சித்தலைவராக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியையும், எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும், சட்டமன்ற கொறடாவாக கோவை மண்டல பொறுப்பாளர் எஸ்.பி.வேலுமணியையும் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.