செய்திகள்
மின் கட்டண குழப்பம்-அதிகாரி விளக்கம்
அந்தந்த நடப்பு மாதத்திற்கான உண்மையான பயன்பாட்டின் அடிப்படையில் மின் கட்டண விபரம் தெரிவிக்கப்படும்.
அவிநாசி:
கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதமாக மின் கட்டணகணக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து எந்த அடிப்படையில் மின் கட்டணம் செலுத்துவது என்ற குழப்பம் மின் நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.அவிநாசி மின் பகிர்மான வட்ட செயற் பொறியாளர் விஜய ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே மாத (2021) மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின் நுகர்வோர் கடந்த 2019 மே மாத மின் கட்டண அடிப்படையிலோ அல்லது கடந்த மார்ச் மாத (2021) மின் கட்டணத்தையோ மின் கட்டணமாக செலுத்தலாம்.
இம்மாதம் (ஜூன் 2021) மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர் கடந்த 2019 ஜூன் மாத மின் கட்டண அடிப்படையிலோ அல்லது கடந்த ஏப்ரல் (2021) மாத மின் கட்டணத்தையோ செலுத்தலாம். அவ்வாறு செலுத்தும் தொகையில் மிகுதி இல்லாத குறை இருப்பின் அடுத்தடுத்த மாத கணக்கெடுப்பின் போது சரி செய்யப்படும்.
இவை தவிர மின் நுகர்வோர் தங்களது வீட்டில் பொருத்தியுள்ள மீட்டரில் உள்ள ‘ரீடிங்’ அளவை, வாட்ஸ் ஆப்பில் புகைப்படமாகவோ அல்லது எஸ்.எம்.எஸ்., இ.-மெயில் மூலமாகவோ அந்த பகுதி உதவி மின் பொறியாளர்களுக்கு அனுப்பி வைத்தால் அந்தந்த நடப்பு மாதத்திற்கான உண்மையான பயன்பாட்டின் அடிப்படையில் மின் கட்டண விபரம் தெரிவிக்கப்படும்.மின் கட்டணத்தை மின்வாரிய அலுவலகத்திற்கு வராமலேயே ஆன்-லைன் மற்றும் மொபைல், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.