செய்திகள்
காட்டுப்பன்றி

காட்டுப்பன்றிகளால் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்து

Published On 2021-06-15 08:40 GMT   |   Update On 2021-06-15 08:40 GMT
காட்டுப்பன்றிகளால் கால்நடைகளின் உயிருக்கும், விவசாயிகளின் உயிருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையே உள்ளது.
உடுமலை:

உடுமலையை அடுத்த கல்லாபுரம், எலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி அணையை நீராதாரமாகக்கொண்டு அதிகளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர கிணற்றுப்பாசனத்தில் நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களையும் பயிரிட்டு வருகின்றனர். ஒவ்வொரு சாகுபடியின் போதும் தண்ணீர் பற்றாக்குறை, இடுபொருட்கள் விலை உயர்வு, கூலி ஆட்கள் தட்டுப்பாடு, விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. உணவு தேடி ஊருக்குள் நுழையும் காட்டுப்பன்றிகள் வயல்வெளிகளிலுள்ள கரும்பு, நிலக்கடலை, நெல் போன்ற பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் வயல்வெளியை சுற்றிலும் சேலைகளை கட்டி வைத்துள்ளனர். இதனால் காட்டுப்பன்றிகள் தொல்லை சற்று குறைகிறது. ஆனாலும் காட்டுப்பன்றிகளால் கால்நடைகளின் உயிருக்கும், விவசாயிகளின் உயிருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற நிலையே உள்ளது. 

எனவே காட்டுப்பன்றிகளை முழுமையாக கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் நீண்டநாள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags:    

Similar News