செய்திகள்
முள்ளங்கியை சுத்தம் செய்யும் பணியில் விவசாயிகள்.

ஒரு ரூபாய்க்கு முள்ளங்கி விற்பனை-விவசாயிகள் வேதனை

Published On 2021-06-14 09:34 GMT   |   Update On 2021-06-14 10:28 GMT
முள்ளங்கிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உருவாக்கி அதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான ஜக்கம்பாளையம், கல்லாபுரம், ஆண்டிய கவுண்டனூர், அமராவதி, கண்ணமநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். 

2 மாத அறுவடை பயிரான முள்ளங்கி குறுகிய காலத்தில் வருமானம் தருவதால் காய்கறி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் தங்கள் வயலில் முள்ளங்கியை நடவு செய்து வருகின்றனர். 

முள்ளங்கி பயிரிட ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது முள்ளங்கி அறுவடை சீசன் என்பதால் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ. 50க்கு விற்பனையாகிறது. 

ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அறுவடை சீசன் என்பதால் மொத்த வியாபாரிகள் நிலத்தில் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.ஆனால் ஒரு கிலோ முள்ளங்கி ஒரு ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

எனவே, முள்ளங்கிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உருவாக்கி அதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News