பட்டுக்கோட்டையில் தொற்று அதிகமாக உள்ள பகுதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிக்காக நகராட்சி பணியாளர்களுடன் தன்னார்வர்களின் ஒத்துழைப்புடன் வார்டு தோறும் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பட்டுக்கோட்டை நகராட்சியின் 27-வது வார்டு கரிக்காடு பகுதியில் தன்னார்வலர்களால் தினசரி கண்காணித்து வருகின்றனர்.
அப்பகுதியில் கபசுரக் குடிநீர் வினியோகம், வீடுதோறும் ஆக்ஸிஜன் அளவு கண்டறிதல், வீட்டில் தனிமையில் சிகிச்சை பெறுபவர்களை கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மேலும் சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பாலமுருகன் தலைமையில் டாக்டர் உமா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு அப்பகுதிமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். தன்னார்வலர்கள் சல்மான்கான், சாகுல்ஹமீது, ஸ்டீபன்ராஜ், ராமமூர்த்தி, அம்ஜத்கான், டாக்டர் உமர் உட்பட நகராட்சி பரப்புரையாளர்கள், பரப்புரை மேற்பார்வையாளர்கள் ஒருங்கிணைந்து இப்பணியை மேற் கொண்டனர்.
பொதுமக்கள் எவருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அப்பகுதி தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதிக்கு பொறுப்புள்ள நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொள்வதற்காக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி ஆணையர் சென்னு கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்