செய்திகள்
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விசைத்தறி தொழிலாளர்கள்
ஓரிரு தொழிலாளருடன் செயல்படும் விசைத்தறி தொழிலுக்கு அனுமதி வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.
பல்லடம்:
பல்லடம் வட்டாரத்தில் விசைத்தறி காடா துணி உற்பத்தி பிரதானமாக உள்ளது. இத்தொழில் சார்ந்து விசைத்தறி கூடங்கள், சைசிங், ஸ்பின்னிங், வீவிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் விசைத்தறிகள் சார்ந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை. இது விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கி உள்ளது.
இது குறித்து விசைத்தறி சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில்,
பனியன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஓரிரு தொழிலாளருடன் செயல்படும் விசைத்தறி தொழிலுக்கு அனுமதி வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. அரசு உத்தரவை கடைபிடித்து விசைத்தறிகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்.இருந்தும் விதிமுறை மீறி சிலர் இயக்குவதால் அபராதம், ‘சீல்’ வைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. எனவே விசைத்தறியாளர்கள் அரசு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றார்.