செய்திகள்
பள்ளிபாளையம் அருகே தொழிலாளி வீட்டில் திருடிய கார் டிரைவர் கைது
பள்ளிபாளையம் அருகே தொழிலாளி வீட்டில் திருடிய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோவில் அருகே வசிப்பவர் ராஜாராமன் (வயது 54). விசைத்தறி தொழிலாளி. இவருக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ராஜாராமன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி ராஜாராமன் தனது மனைவியுடன் நாமக்கல் அருகே கொண்டிசெட்டிபட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலை திரும்பி வந்தார். அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகை, ரூ.7 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் ராஜாராமன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கார் டிரைவரான மணிகண்டன் (33) என்பவர் நகை மற்றும் பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்ததுடன், நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.