செய்திகள்
பின்னலாடை நிறுவனங்களால் வேகமாக பரவிய கொரோனா
திருப்பூரில் மறைமுகமாக இயங்கிய பின்னலாடை நிறுவனங்களால் கொரோனா வேகமாக பரவியதாக புகார்கள் எழுந்துள்ளது.
திருப்பூர்:
கொரோனா தொற்று பாதிப்பில் தமிழகத்தில் திருப்பூர் 3-ம் இடத்தை எட்டியுள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் சில இடங்களில் மறைமுகமாக இயங்கிய பின்னலாடை நிறுவனங்களால் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து நேற்று திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியம் கூறும் போது,அரசுக்கு தெரியாமல் சில தொழில் நிறுவனங்கள் இயங்குவதால் திருப்பூரில் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது என்றார்.
திருப்பூர் மருத்துவ அலுவலர் ஒருவர் கூறும் போது, திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மறைமுகமாக இயங்குவதும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணம். பெருமாநல்லூர் சாலையில் மாலை நேரங்களில் பலரும் வேலையை முடித்து விட்டு இரு சக்கர வாகனங்களில் செல் கிறார்கள்.பொதுமக்களின் நடமாட்டத்தை குறைத்தால் மட்டுமே தொற்றின் எண்ணிக்கையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றார்.
பின்னலாடை நிறுவன ஊழியர்கள் கூறும் போது, ஊரடங்கு நாட்களிலும் சில இடங்களில் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அதேபோல விடுதியில் தங்கியிருக்கும் தொழிலாளர்களை வைத்தும் இயக்குகிறார்கள்.இதனால் தொற்று பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறையாத நிலை தொடர்கிறது என்றனர்.