செய்திகள்
குமரியில் மழையால் கடும் பாதிப்பு- நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
குமரி மாவட்டத்தில் கனமழையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டன. விவசாய பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், குமரி மாவட்ட மழை பாதிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் கனமழையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா 5000 ரூபாய், பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா 4100 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.
மழையால் பாதிப்படைந்த மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். நெற்பயிர் தவிர அனைத்து பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு ரூ.10000 நிவாரணம் வழங்கப்படும். நெற்பயிர் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.20000 வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.