நெல்லையில் மாணவியை கடத்தி சென்ற டிரைவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
நெல்லை:
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 24-ந்தேதி திடீரென காணாமல் போனார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அந்த மாணவி திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டார். போலீசார் அந்த மாணவியிடம் விசாரித்தபோது தருவையை சேர்ந்த முரளி(வயது 20) என்பவர் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
டிரைவரான முரளி அந்த பெண்ணை கடத்தி சென்ற பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதை அறிந்தார். போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணவியை மீண்டும் வீட்டில் கொண்டுவந்து விட்டு விட்டு, தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முரளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.