முகநூலில் போலி கணக்கு தொடங்கி ஓ.பன்னீர்செல்வம் மகன் பெயரில் பணம் பறிக்க முயற்சி
தேனி:
தமிழக முன்னாள் துணை முதல்வரின் இளைய மகனான ஜெயபிரதீப் பெரியகுளம் அருகில் உள்ள கைலாசநாதர் கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது பெயரில் முகநூல் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் அவருடைய பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிலர் போலியான முகநூல் கணக்கு தொடங்கினர். அதன்மூலம் நட்பு வட்டாரங்களை அதிகரித்துள்ளனர்.
பலர் நண்பர்களாக இணைந்தனர். அவர்களின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பணம் பறிக்கும் முயற்சியில் அந்த மர்மநபர் ஈடுபட்டுள்ளார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், தனது வங்கி கணக்கில் செலுத்துமாறும் அடிக்கடி குறுந்தகவல் வந்துள்ளது.
இதனால் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் இந்த முகநூல் குறித்து ஜெயபிரதீப் கவனத்திற்கும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த வங்கி கணக்கை முடக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
இது குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஏற்கனவே அரசியல் பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு சிலர் கைதாகி உள்ளனர்.
இந்நிலையில் ஜெயபிரதீப் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கியது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.