பேராவூரணி அருகே வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை
பேராவூரணி:
பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர், கருப்பமனை கிராமத்தில், மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், சப்-கலெக்டர் பாலசந்தர் தலைமையில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சவுந்தரராஜன் பரிசோதனையை தொடங்கி வைத்தார்.
இதில் சப்-கலெக்டர், தாசில்தார் ,வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் நடந்தே வீடு வீடாக சென்று 64 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். முன்னதாக அனைவருக்கும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்சியில் மருத்துவர் வெங்கேஷ், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் சந்திரசேகர், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், சுகாதார ஆய்வாளர் ராம்குமார், புண்ணியநாதன், மருந்தாளுனர் சரவணன், ஆய்வக நுட்புனர் குமரேசன் தலைமையிலான குழுவினர், பாங்கிரான்கொல்லை உதயகுமார் தலைமையிலான தன்னார்வாலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.