செய்திகள்
ஏப்ரல் மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
கடந்த மாதம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையால் இது தொடருமா? என்பது கேள்விகுறியாகியுள்ளது. இது குறித்து திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
கொரோனா முதல் அலை மற்றும் ஊரடங்கால் 2020-21ம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி சரிந்தது. கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.962.92 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் நடந்தது.
இந்த நிதியாண்டில்(2021-22) கடந்த ஏப்ரல் மாதம் ஏற்றுமதி வர்த்தகம் ரூ. 9,661 கோடியாக இயல்பு நிலையை எட்டிப்பிடித்துள்ளது. உலக நாடுகளில் இருந்து இந்திய ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகளவு ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதால் தற்போது, பல்வேறு மாநிலங்களில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் உட்பட பிரதான ஏற்றுமதி நகரங்களில், ஆடை உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஏற்றுமதியில் கண்டுள்ள ஏற்றம் வரும் மாதங்களில் தொடர்வது சந்தேகமே. இவ்வாறு அவர்கள் கூறினர்.