செய்திகள்
திருப்பூர் பல்லடம் சாலை மேம்பாலம் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

முழு ஊரடங்கால் திருப்பூரில் சாலைகள் வெறிச்சோடின

Published On 2021-05-16 05:05 GMT   |   Update On 2021-05-16 05:05 GMT
முழு ஊரடங்கு காரணமாக திருப்பூரில் இன்று பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியதுடன், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருப்பூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில்  முழுஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில்  ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில்  காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை  தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
  
கடந்த  2-ந்தேதி  ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், கடந்த  9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட  இருந்தது.
 
இந்தநிலையில் தொற்று பரவலின் தாக்கம் காரணமாக   தமிழகம் முழுவதும் கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்   பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கு  வசதியாக  9-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு கடை கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
 
இந்தநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
  
இதையொட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும்  காய்கறி, மளிகை கடைகளும் அடைக்கப்பட்டன.   வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் மட்டும்   வாகனங்களில் அனுமதிக்கப்பட்டனர்.
  
மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.   விதிகளை மீறி சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர்.   முழு ஊரடங்கால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்கு  உட்பட்ட தாராபுரம்,பல்லடம், உடுமலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும்  அமைதியாக காட்சியளித்தன.   ஓட்டல்கள் குறிப்பிட்ட நேரத்தில்  மட்டும் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

வீடுகளில்  முடங்கிய  பொதுமக்கள் தங்களுக்கு தேவையான  உணவு பொருட்களை  ஆன்லைன்  மூலம் ஆர்டர் செய்தனர்.
Tags:    

Similar News