வீடு, வீடாக சென்று கபசுரக் குடிநீர் வழங்கும் அரசு சித்த மருத்துவர்- பொதுமக்கள் பாராட்டு
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு உதவி மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் அருண்குமார்.
இவர் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகள் என அனைவருக்கும் பணிக்கு வந்த உடனேயே கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் என வழங்குவதோடு கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான விழிப்புணர்வு மற்றும் இயற்கை உணவு முறைகளையும் கூறி அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்.
தற்போது பட்டுக்கோட்டை பகுதியில் அதிகமான நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் மனவேதனை அடைந்த அருண்குமார் பணி நேரம் முடிவடைந்த பிறகும் தனது மோட்டார் சைக்கிளில் கபசுர குடிநீர் தயார் செய்து வீடு வீடாகச் எடுத்து சென்று பொதுமக்களுக்கு வழங்குவதோடு கொரோனாவிலிருந்து காத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் பொதுமக்கள் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இவரது இந்த செயல் பொதுமக்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தனது பணி நேரம் முடிந்தபிறகும் விழிப்புணர்வு மற்றும் சமூகநலன் கருதி செயல்படும் சித்த மருத்துவர் அருண்குமாரை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.