செய்திகள்
திருவையாறு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு- அண்ணன்-தம்பி கைது
திருவையாறு அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே உள்ள திங்களூர் மாதாகோவில் தெருவை சேர்ந்த ரெங்கராஜ் மகன் மருதமுத்து (வயது27). இவருக்கும், அதே தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் கார்த்திக் (29) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துவந்தது. இதன் காரணமாக சம்பவத்தன்று நடந்த தகராறில் கார்த்திக், அவருடைய தம்பி தினேஷ் (23), இவர்களுடைய தந்தை நாகராஜ் (62) ஆகிய 3 பேரும் சேர்ந்து அரிவாளால் மருதமுத்துவை தலையில் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த மருதமுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நாகராஜை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.