செய்திகள்
தற்கொலை

திருப்பூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-05-11 10:49 GMT   |   Update On 2021-05-11 14:37 GMT
திருப்பூரில் தங்கைக்கு செல்போனில் தகவல் கூறிவிட்டு, தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பர்பாளையம்:

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த கவிதாநகர் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி ரேணுகா (வயது 35). இவர்களது வீட்டின் ஒரு தளத்தில் ரேணுகாவின் தங்கை பசுபதி தனியாக வசித்து வந்தார். ரேணுகா சற்று உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். இதனால் அவரை கடினமான வேலை எதுவும் செய்ய வேண்டாம் என்று குடும்பத்தினர் கூறி வந்துள்ளனர். ஆனால் சம்பவத்தன்று ரேணுகா வீட்டு வேலைகளை செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவருடைய தங்கை பசுபதி, உன்னை கடினமான வேலைகளை செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கும் போது, அதையும் மீறி ஏன் வேலை செய்கிறாய் என்று ரேணுகாவிடம் கேட்டுள்ளார்.

மேலும் இந்த தகவலை ரேணுகாவின் கணவரான அய்யப்பனுக்கும் செல்போன் மூலமாக பசுபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து அய்யப்பன் செல்போன் மூலம் ரேணுகாவை தொடர்பு கொண்டு கண்டித்துள்ளார். இதனால் ரேணுகா அவருடைய தங்கையான பசுபதி மீது கோபமடைந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அய்யப்பன் மற்றும் பசுபதி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டனர். மாலை நேரத்தில் பசுபதி வீட்டிற்கு வரும் நேரம் பார்த்து ரேணுகா அவருடைய செல்போனிற்கு தொடர்பு கொண்டு, நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் பதறிபோன பசுபதி உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்தபோது ரேணுகா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை மீட்டு போயம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ரேணுகா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரேணுகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News