செய்திகள்
ரெம்டெசிவிர் மருந்தை போலி ஆவணம் காட்டி பெற முயற்சி- 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு, ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் தொடங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
சென்னை:
கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது. இதனை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்து, உரிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி முதன்முதலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு, ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் தொடங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
இந்தநிலையில், இன்றும் ரெம்டெசிவிர் மருந்து வாங்க சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரெம்டெசிவிர் மருந்தை போலி ஆவணம் காட்டி பெற முயற்சி செய்ததாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த நோயாளிகளின் பெயரில் பரிந்துரை சீட்டு இருந்ததாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.