செய்திகள்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2021-05-07 15:57 GMT   |   Update On 2021-05-07 19:44 GMT
கேரளா, காஞ்சிக்கோடு பகுதியில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அடுத்த 4 நாட்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சராக நான் பதவி ஏற்றதற்கு வாழ்த்தியதற்காகவும், தமிழகத்திற்கு அனைத்து ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்ததற்கு நன்றி. நான் தமிழகத்தில் நிலவும் கொரோனா தொற்று குறித்து, மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள், மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன்.

கொரோனா பரவலை தடுக்க எத்தனையோ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாலும், தற்போது மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் தேவையில் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தமிழகத்தில் தற்போது தினமும் 440 டன் ஆக்சிஜன் நுகரப்படுகிறது. இன்னும் 2 வாரங்களில் அதன் அளவு மேலும் 400 டன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையின் அளவு 840 டன் ஆக அதிகரிக்கும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, தேசிய ஆக்சிஜன் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் அளவு 220 டன் ஆக உள்ளது. இதுகுறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்த மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுடன் (டி.பி.ஐ.ஐ.டி.) 1 மற்றும் 2-ந்தேதிகளில் ஆலோசனை நடத்தினோம். அதில், குறைந்தபட்சம் 476 டன் அளவு மருத்துவ ஆக்சிஜனை உடனடியாக அளிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால் இதற்கான உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை. எனவே மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்வதில் கடுமையான சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கேரளா, ஆந்திரா, தமிழக டி.பி.ஐ.ஐ.டி. அதிகாரிகள் அவசரமாக 6-ந்தேதி கூட்டம் கூடி சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, அடுத்த 4 நாட்களுக்கு கேரளா காஞ்சிக்கோடு ஐ.என்.ஓ.எக்ஸ். மூலம் 40 டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு வழங்கப்படும்.

ஸ்ரீபெரும்புதூர் பிரக்சயர் (லின்ட் செயிண்ட் கோபைன்) மூலம் 60 டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு ஒதுக்கப்படும். அதில் 20 டன் ஆக்சிஜன் 2 நாட்கள் கழித்து வழங்கப்படும்.

இடைக்கால தேவைகளுக்காக ரூர்கேலா எஸ்.ஏ.ஐ.எல். மூலம் 120 டன் ஆக்சிஜன் அளிக்கப்படும்.

இந்த நிலையில் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுக்கான உத்தரவுகள் வருவதற்காக காத்திருக்கிறோம். தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு நிலை மிக மிக மோசமாக உள்ளது. செங்கல்பட்டில் 2 நாட்களுக்கு முன்பு சமீபத்தில் துரதிருஷ்டவசமாக 13 பேர் மரணம் சம்பவித்துவிட்டது. இந்த கடினமான சூழ்நிலையில் தமிழகத்திற்கு முழு ஆதரவு அளித்து, ஆக்சிஜன் கிடைப்பதில் திருத்தப்பட்ட உத்தரவு அளிக்கப்படுவதற்கு தகுந்த நடவடிக்க எடுக்க வேண்டும்.

மேலும், 20 ஐ.எஸ்.ஓ. கிரயோஜெனிக் கண்டெய்னர்கள் மற்றும் ரெயில்கள் மூலம் தமிழகத்திற்கு ஆக்சிஜன் வரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். தேசத்தை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றும் உங்களின் அயராத முயற்சிக்கு எனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிப்பேன் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News