கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 6½ பவுன் நகை திருட்டு
கவுண்டம்பாளையம்:
கோவை நரசிம்ம நாயக்கன்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முருகையா. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகையாவின் மனைவி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பொள்ளாச்சி அடுத்த மண்ணூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
கடந்த 5-ந் தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதற்காக முருகையா அங்கு சென்றார். பின்னர் அவர்களை அழைத்து கொண்டு நேற்று காலை தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் காம்பவுண்ட் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோவில் உள்ள துணிகள் அனைத்தும் வீடு முழுவதும் சிதறி கிடந்தது. இதையடுத்து பீரோவை பார்த்தார். அதில் வைத்திருந்த நெக்லஸ், செயின், பிரெஸ்லெட், கம்மல், மோதிரம் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.