செய்திகள்
பல்லடத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சி, ராஜீவ்காந்தி காலனியைச் சேர்ந்த ஆரான் மகன் ரத்தினவேல்(வயது31) இவர் பல்லடத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதிலட்சுமி(29) என்ற மனைவியும், 7 மற்றும் 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால், வீட்டிலிருந்த அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த ரத்தினவேல், மனைவி மற்றும் குழந்தைகளை படுக்கையறையில் உள்ளே தள்ளிவிட்டு அதன் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, முன்புற அறையில் உள்ள, வீட்டின் கூரைக் கம்பியில், வேட்டியால் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார்.
கணவர் தூக்குப்போட்டு தொங்குவதை கண்ட அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அலறி துடித்து, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், என சத்தமிட்டனர். இவர்களது அலறல் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளவர்கள் ஓடி வந்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மனைவி ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.