கபிஸ்தலம் அருகே வியாபாரியை கடத்தியதாக 3 பேர் கைது
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் வெள்ளாளர் தெருவில் வசிப்பவர் கருப்பையன் மகன் சேகர் (வயது 55). நெல் வியாபாரம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருச்சி திருவெறும்பூர் சேர்ந்த அசோக் என்பவரிடம் பைனான்ஸ் முறையில் புது டிராக்டரை ரூ.2 லட்சம் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார். இந்த நிலையில் கபிஸ்தலம் கடைத்தெருவில் திருச்சி திருவெறும்பூர் சேர்ந்த அசோக் என்பவர் சேகரிடம் வந்து டிராக்டரை தருமாறு கேட்டுள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஏற்பட்டது.
அப்போது அசோக் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து கொண்டு சேகரை கருப்பு நிற காரில் கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சேகர் மனைவி உமாராணி கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கருப்பு நிற காரை தேடிவந்தனர்.
அப்பொழுது இந்த கடத்தலுக்கு உதவியதாக கபிஸ்தலத்தை சேர்ந்த கீர்த்திவாசன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் திருக்கருக்காவூர் அருகே சேகரை கடத்தி வந்த காரை பிடித்தனர். மேலும் இந்த வழக்கில் சேகரை கடத்தியும், கடத்தலுக்கு உதவி செய்ததாகவும் பட்டீஸ்வரம் தூக்குதெரு ராமநாதன் (34), கும்பகோணம் சாக்கோட்டை கீழத்தெரு ஆனந்த் (25) , கபிஸ்தலம் சொர்ண பிள்ளையார் கோவில் தெரு கீர்த்திவாசன் (40) ஆகிய 3 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருச்சி திருவரம்பூர் அசோக் உள்ளிட்ட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்தனர்.