செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னையில் மக்கள் விருந்தினர்கள் சந்திப்பை தவிர்க்க வேண்டும்- சிறப்பு அதிகாரி வேண்டுகோள்

Published On 2021-04-29 05:06 GMT   |   Update On 2021-04-29 07:26 GMT
சென்னையில் 28 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தினசரி பாதிப்பு படிப்படியாக உயர்ந்து நேற்று 5 ஆயிரத்தை எட்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 764 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 665 பேர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இதில் 25 சதவீத பாதிப்பு சென்னையில் பதிவாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார். கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார் கொரோனா வார்டுகளை தொடங்குவதற்கு அனுமதி தேவையில்லை என்றும் தகவல் தெரிவித்தால் போதும் என்றும் மாநகராட்சி தளர்வு அளித்துள்ளது. இதையடுத்து பல மருத்துவமனை நிர்வாகத்தினர் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து தனியாக கொரோனா வார்டுகளை உருவாக்கி வருகிறார்கள்.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரியான சித்திக் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

சென்னையில் சுனாமி போல கொரோனா பரவுகிறது. 28 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

எனவே பொதுமக்கள் விருந்தினர்களை நேரில் சென்று சந்திப்பது, அவர்களை வீடுகளுக்கு அழைப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் கூட்டமாக கூடுவதையும் முழுமையாக தவிர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

இதுபோன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்பட்டால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இதனை உணர்ந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய மறக்கக் கூடாது. அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

சென்னையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரி செய்வதற்கான பணிகளை விரைவுபடுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News